Wednesday 4 July 2012

தமிழர்கள் வரலாற்று பிரக்ஞை அற்றவர்கள் தானா?

ஏ.கே.செட்டியார் காந்தியை நான் விற்க மாட்டேன் என்று நெஞ்சுறுதியோடு சொன்ன தமிழர் !


"தமிழர்கள் வரலாற்று பிரக்ஞை அற்றவர்கள்: அவர்களுக்கு தங்களுடைய பாரம்பரியத்தை , வரலாற்றை அடிக்கடி ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது " என்று பேச்சை தொடங்கினார் "ஞானாலயா" கிருஷ்ணமூர்த்தி அவர்கள் .

திரு ஏ.கே.செட்டியார் தொகுத்த காந்தி ஆவணப்படம் திரையிடல் மற்றும் தமிழ் மற்றும் தமிழர்களுக்காக ஏ.கே.செட்டியார் ஆற்றிய பங்கு பற்றிய கருத்தரங்கரகை தேசிய நாட்டுப்புறவியல் வளர்ச்சி மையம் (National folklore support centre) திங்களன்று (20.08.07) சென்னையில் ஏற்பாடு செய்திருந்தது. கருத்தரங்கில் துவக்க உரையை வழங்க வந்த தமிழாசிரியர் : திரு .ஏ.கே.செட்டியாருடன் நெருக்கமான நட்பு கொண்டிருந்த ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மேற்சொன்ன குற்றச்சாட்டுடன் உரையை தொடங்கினார்.



காந்தி படம் என்றால் நமக்கு உடனே நினைவு வருவது  ரிச்சர்ட் அட்டன் பரோ  எடுத்த காந்தி திரைப்படம் தான்.ஆனால் அதற்கு முன்னரே காந்தி ஆவணப் படத்தை ஒரு தமிழர் தயாரித்து விட்டார்.  

1937 ல் தொடங்கி 1940 வரை மூன்று ஆண்டுகள் , சுமார் ஒரு லட்சம் மைல் பயணம் என்ற கடுமையான சோதனைகளுக்குப்பிறகே அவரால் ஐந்தரை மணி நேரம் கொண்ட காந்தி ஆவணப்படத்தை தயாரிக்க முடிந்தது.


ஏ.கே.செட்டியார் அவர்கள் காந்தி ஆவணப்படம் தொகுத்தவர் மட்டுமல்ல . தமிழகத்தின் மிகச்சிறந்த இரண்டு கவிஞர்களை சிறப்பான கவிதை எழுத தூண்டியவர். தன்னுடைய குமரிமலர் பத்திரிக்கை வழியாக பாரதிதாசனின்  அழகின் சிரிப்பு கவித்தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். பாரதிதாசன் அழகின் சிரிப்பு எழுத காரணமானவரும் ஏ.கே.செட்டியார்தான் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் கவிதை நூல்களை திரட்டி வெளியிட்டிருக்கிறார்.

குமரி மலர் முதல் இதழை பார்த்து விட்டு திரு.ராஜாஜி பாராட்டு கடிதம் எழுதியதுடன் , குமரிமலர் தடைபடாமல் வரவேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்திருக்கிறார்.

இன்றைக்கு நாம் எல்லோரும் பார்க்கும் சுபாஷ் சந்திரபோஸ் புகைப் படத்தை எடுத்தவரும் இவரே. வியன்னாவில் 12 நாட்கள் போஸ் அவர்களுடன் தங்கி இருந்த போது ஏ.கே.செட்டியார் எடுத்த புகைப்படம் தான் இன்றளவிற்கும் இந்தியாவெங்கும் வைக்கப்பட்டிருக்கும் புகைப்படம்.

காந்தி ஆவணப்படத்தை அமெரிக்காவின் 20th Century fox நிறுவனம் 20 லட்சம் ரூபாய்க்கு விலை பேசிய போது  காந்தியை நான் விற்கமாட்டேன் என்று நெஞ்சுறுதியோடு சொன்ன தமிழர்.

உலகம் சுற்றிய தமிழர்  என்று அன்போடு அழைக்கப்படும் ஏ.கே.செட்டியார் அவர்கள் 17 வயதில் பத்திரிக்கை ஆசிரியர் ஆனவர். 17 நூல்கள் எழுதி உள்ளார். வாழும் காலத்திலேயே  காந்தி  மகானைப்பற்றி ஆவணப் படம் இவர் எடுத்ததைப்போல இது வரை வரலாற்றில் எங்கும் நிகழ்ந்தது கிடையாது.

தற்புகழ்ச்சியை விரும்பாத , தன்னை புகைப்படம் கூட எடுக்க அனுமதிக்காத ஏ.கே.செட்டியார் பற்றிய இந்த தகவல்களையெல்லாம் ஞானாலயா  கிருஷ்ணமூர்த்தி சொல்ல சொல்ல , அவர் முதலில் சொன்னது உண்மை என்றே படுகிறது. நம்மவர்களுக்கு வரலாற்று பிரக்ஞை குறைவுதான்.

--கௌதம்


Courtesy: http://www.andhimazhai.com/news/printnews.php?id=5548

1 comment:

  1. அய்யா உங்கள் எழுத்தும் தளமும் அருமை

    ReplyDelete

ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்

புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம்,  தமிழில் வெளியான நூல்களின் முதல் பதிப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. ஏறத்தாழ ஒரு இலட்சம் நூல்களை தன்ன...