Saturday 5 September 2015

தமிழ் புலவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை: 201வது பிறந்த ஆண்டு கொண்டாட்டம்

சென்னை:தமிழ் புலவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின், 201வது பிறந்த ஆண்டு கொண்டாட்டம், சென்னையில் நேற்று நடந்தது. இதில் தமிழறிஞர்கள், ஆர்வலர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
கருத்தரங்கம் 'தமிழறிஞர், மகா வித்வான்' என, அழைக்கப்படும், மீனாட்சி சுந்தரம் பிள்ளையின், 201வது பிறந்த ஆண்டு விழா கருத்தரங்கம், சென்னை, பெசன்ட் நகரில் உள்ள, உ.வே.சாமிநாதையர் நுால் நிலையத்தில், நேற்று நடந்தது.


இந்திய தொல்லியல் துறையின் முன்னாள் கண்காணிப்பாளரும், உ.வே.சாமிநாதையர் நுாலக செயலருமான சத்தியமூர்த்தி வரவேற்புரையாற்றினார். 'தினமலர்' நாளிதழ் ஆசிரியரும், டாக்டர் உ.வே.சாமிநாதையர் நுால் நிலைய ஆட்சிக்குழு உறுப்பினருமான, டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி தலைமையேற்றார். 'திருவானைக்கா அகிலாண்ட நாயகி பிள்ளைத் தமிழ்' என்ற நுாலை, டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி வெளியிட, தஞ்சை தமிழ் பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் இ.சுந்தரமூர்த்தி பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில், டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:தமிழ் வளர்ச்சிகடந்த, 19ம் நுாற்றாண்டில் வாழ்ந்த முக்கியமான தமிழ் புலவர்களில், மீனாட்சி சுந்தரம் பிள்ளையை மறக்க முடியாது. அவர், தமிழ் வளர்ச்சி பணிகள் மற்றும், தமிழ் நுால்களை திரட்டுவதில் கடினமாக உழைத்து, தமிழ் வளர்ச்சிக்கு உந்துதலாக இருந்தார். தமிழ் மன்னர்கள் சிறிய பொருளாதாரம் கொண்டவர்கள், அவர்கள் எந்தவித நாணயங்களையும் வெளியிடவில்லை
என்பது போன்ற கூற்று இருந்தது.

முற்றுப்புள்ளி :கடந்த, 1985ல், நான் கண்டுபிடித்த சங்ககால பாண்டிய மன்னர் பெருவழுதி நாணயம், இந்தக் கூற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. மீனாட்சி சுந்தரம் பிள்ளை மற்றும் உ.வே.சா., நுால்களை ஆய்வு செய்ததில், பண்டைய தமிழர் கலாசாரத்தை தெளிவாக அறிந்து கொள்ள முடிந்தது.

அதிக பதிப்புகள் :தமிழ் தாத்தா உ.வே.சா., ஏராளமான நுால்கள் எழுதியுள்ளார். அவர் எழுதி வெளிவராத நுால்களை வெளியிடவும், அதிக பதிப்புகள் அச்சிடவும் முன்வர வேண்டும். இதற்கு பல செல்வந்தர்கள் உதவத் தயாராக இருக்கின்றனர்.இவ்வாறு அவர் பேசினார்.
கருத்தரங்க பொருள் குறித்து, தமிழ் பல்கலை கழக முன்னாள் துணைவேந்தர் இ.சுந்தரமூர்த்தி பேசியதாவது:தமிழ் நுால் தேடுதல் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மாணவர், உ.வே.சாமிநாதையர். தன் ஆசிரியரை பற்றி, இரண்டு பாகங்களில், 724 பக்கங்களுக்கு நுால்கள் எழுதியுள்ளார். அதில், ஆசிரியரின் தமிழ் நுால் தேடுதல் குறித்தும், அவரது நுால்களை தேடும் முயற்சிகள் குறித்தும், சாமிநாதையர் விரிவாக விளக்குகிறார்.

கிடைப்பது அரிது :இப்படி ஓர் தமிழறிஞர் ஆசிரியராகவும், மாணவராகவும் இனி வரும் காலங்களில் கிடைப்பது அரிது. நல்ல ஆசிரியர், நல்ல பண்பாளர், நல்ல சான்றோர் என அனைத்துக்கும் சொந்தக்காரர், மீனாட்சி சுந்தரம் பிள்ளை.இவ்வாறு அவர் பேசினார்.புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நுாலகத்தைச் சேர்ந்த பா.கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார். சாமிநாதையர் நுால் நிலைய காப்பாட்சியர் கோ.உத்திராடம் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் தமிழ் ஆர்வலர்கள், கல்லுாரி மாணவ, மாணவியர் ஏராளமானோர் பங்கேற்றனர்.

ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்

புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம்,  தமிழில் வெளியான நூல்களின் முதல் பதிப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. ஏறத்தாழ ஒரு இலட்சம் நூல்களை தன்ன...