Thursday 5 July 2012

தமிழால் இணைவோம்- ஞானாலயா புதுக்கோட்டை

 புதுக்கோட்டை ஞானாலயா என்கிற நூலகத்தைப் பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. தமிழகத்தின் தனியார் நிர்வகிக்கும் நூலகங்களில் இரண்டாவது பெரிய நூலகம் என்கிற பெருமையைப் பெற்றது.முதலிடத்தில் இருந்த மறைமலை அடிகள் நூலகம், சரியாகப் பராமரிக்கப்படாமல்,முக்கால் பங்கு சேகரங்கள் கரையான் அரித்து மீதம் உள்ளவை கன்னிமாராவில் அடைக்கலமாகி விட்டது. இன்றைய நிலையில் தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய தனியார் நூலகம் ஞானாலயா ஒன்றாகத்தான் இருக்க முடியும்! வெறும் புத்தகங்கள் எண்ணிக்கையில் மட்டுமல்ல, சில விசேஷத் தன்மைகளோடும் கூட !

சென்னை ரோஜா முத்தையா நூலகத்தை பயன்படுத்தி பத்துக்கும் குறைவானவர்கள் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்கள் என்ற தகவலோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் புதுக்கோட்டை ஞானாலயாவின் உதவியோடு சுமார் 75 பேருக்கும் மேல் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்கள் என்ற தகவல் ஞானாலயா ஆராய்ச்சி செய்பவர்களுக்கு எந்த அளவுக்கு உதவியாக இருந்திருக்கிறது என்பதை சொல்லும்.

அது தவிர மாநிலத் தலைநகர் சென்னையில்கன்னிமாரா உட்படப் பலப்பல நூலகங்கள் இருந்தும் கூட, ஞானாலயாவைத் தேடி புதுக்கோட்டைக்கு வந்து ஆராய்ச்சியாளர்களும், எழுத்தாளர்களும் அரசியல்வாதிகளும் தங்களுக்குத் தேவையான தகவல்களைப் படியெடுத்துச் செல்கிறார்கள் என்றால், அது ஞானாலயாவில் எப்படி தலைப்பு வாரியாக, அரியவகைப் புத்தகங்களை முறையாகத் தொகுத்து வைத்திருக்கிறார்கள், வைத்திருக்கிறார்கள், பாதுகாத்துவருகிறார்கள் என்பது தான்  விசேஷம், வித்தியாசமே!



இந்த நூலகத்தை உருவாக்கி காத்துவரும் கிருஷ்ணமூர்த்தி தம்பதியினர்  தங்களுக்குப் பின் இந்த தமிழ் சமுதாயத்திற்கு தாங்கள் காத்து வரும் தமிழ்நூல்களின் பொக்கிஷத்தை குறைவற கொடுத்து செல்லவே விரும்புகின்றனர்.

அதற்கு நாம் செய்ய வேண்டியது, வருங்கால தலைமுறைக்கு செய்ய வேண்டியது, நூலகத்தை காத்து நடத்த கரம் கோர்ப்பதுதான்.


செய்ய வேண்டிய பணிகளாக நம் முன்னே இருப்பது .....

முதலாவதாக, அங்கே இருக்கும் அரிய சேகரத்தை மின்னாக்கம் செய்கிற பணி அதற்குத்தேவையான தன்னார்வலர்களைப் புதுக்கோட்டையில் கண்டறிவது, அவர்களை ஒருங்கிணைப்பது. அவர்களுக்கு மின்னாக்கம் செய்வதில் பயிற்சிப்பட்டறைகளை நடத்துவதற்கும், சில தொழில்நுட்ப உதவிகளுக்கும் உள்ளூரிலேயே தகுந்த நபர்களை அடையாளம் காணும் முயற்சி தொடங்கி இருக்கிறது.

 இரண்டாவதாக சில ஸ்கேனர்கள், கணினிகள்  இவைகள் இப்போது வேலையை செய்வதற்கு என்று ஆரம்பித்தாலும், பின்னால் ஒரு செர்வர் ப்ளஸ் நோடுகளாக மாற்றி, படிப்பதற்கு, ஆராய்ச்சிக் குறிப்புக்கள் எடுத்துக் கொள்வதற்குமான சாதனங்களாகவும் வைத்துக் கொள்வதற்கான அடிப்படைக் கட்டமைப்பு அதற்கான  நிதி ஆதாரங்களைத் திரட்டுவது.

 மூன்றாவதாக, பெருகி வரும் சேகரங்களைப் பாதுகாப்பதற்காக, மாடியில் தொள்ளாயிரம் சதுர அடியில் உத்தேசித்திருக்கும் கட்டிட விரிவாக்கத்துக்கான நிதி ஆதாரங்களைத் திரட்டுவது. நல்லெண்ணம் கொண்ட ஒரு நண்பர் அச்சாரமாகக் கொடுத்திருக்கும் ஒருலட்சரூபாயுடன், இந்த வேலை ஆரம்பமாகி விட்டது.சுமார் எட்டரை-ஒன்பது லட்சம் மதிப்பீட்டிலான இந்த வேலை தொய்வில்லாமல் நடப்பதற்கு, உதவிக்கரங்கள், நேரத்துடன் நீண்டாக வேண்டும்.


நான்காவதாக, திரு பா.கிருஷ்ணமூர்த்தியிடம் இருக்கும் புத்தகங்கள், புத்தக ஆசிரியர்கள், பதிப்பகங்கள் குறித்த தகவல்களை ஆவணப் படுத்துவது

இதுவரை ஞானாலயாவைக் குறித்து வெளியாகியிருக்கும் தகவல்களை ஒரே இடத்தில் பார்க்கும் விதத்தில் ஒரு வலைப்பூ தொடங்கப் பட்டிருக்கிறது.

http://gnanalaya-tamil.blogspot.in/   இந்த வலைப்பக்கங்களை புக்மார்க் செய்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப் படுத்துங்கள். . ஒரு நல்லபணிக்கு உங்களால் ஆனவரை உதவுங்கள்!

ஆரம்பத்திலேயே சொன்னதைப் போல, நிதியுதவி முக்கியம் தான்! ஆனால் வெறும் பணத்தினால் மட்டுமே சாதிக்கக் கூடிய பணி இல்லை இது! மனித உழைப்பும் அதிகமாகத் தேவைப்படுகிற பணி இது! புத்தகத்தை நேசிக்கிறவர்கள்,  மரபுகள், பண்பாடு, வரலாற்றைத் தெரிந்து கொள்ள ஆர்வத்தோடு இருப்பவர்கள், கருத்துத் திருடர்களிடமிருந்து, உண்மையைப்பாதுகாக்கும் ஆர்வமுடையவர்கள் என்று பலவிதமான ஆர்வலர்களும் ஒன்று கூடித் தேர் இழுக்கும் உன்னதமான பணி இது.

தொடர்புக்கான முகவரி, மற்றும் நிதி அனுப்புவதற்குத் தேவையான விவரங்கள்:

ஸ்ரீ பா. கிருஷ்ணமூர்த்தி, ஞானாலயா,
6, பழனியப்பா நகர், திருக்கோகர்ணம்,
புதுக்கோட்டை 622 002 தமிழ்நாடு.

தொ.பே. எண்:  04322-221059
மொபைல்:     +91 9965633140

e-mail: gnanalayapdk@gmail.com

வங்கி விவரம்:

Account Holder: Sri B. KRISHNAMOORTHY
S B Account Number: 1017047
Bank Name: UCO Bank
Branch: PUDUKKOTTAI (Tamilnadu India).
IFS CODE: UCBA0000112

 

4 comments:

  1. தமிழ்மணம் நட்சத்திரமாக இயக்கும் இந்த வாரத்தில் நேற்று எனது தளத்தில் வெளியான இடுகை - தகவலுக்காக

    ReplyDelete
  2. //முதலாவதாக, அங்கே இருக்கும் அரிய சேகரத்தை மின்னாக்கம் செய்கிற பணி அதற்குத்தேவையான தன்னார்வலர்களைப் புதுக்கோட்டையில் கண்டறிவது, அவர்களை ஒருங்கிணைப்பது. அவர்களுக்கு மின்னாக்கம் செய்வதில் பயிற்சிப்பட்டறைகளை நடத்துவதற்கும், சில தொழில்நுட்ப உதவிகளுக்கும் உள்ளூரிலேயே தகுந்த நபர்களை அடையாளம் காணும் முயற்சி தொடங்கி இருக்கிறது.//

    உள்ளூரில் கிடைத்தால் சரி. இல்லையானால் ஒரு நாள் பயிற்சி வழங்க நான் தயார். என்னால் ஆன உதவி.

    ReplyDelete
  3. https://docs.google.com/file/d/0B0hsZOLFx-HfNDU1OWM1ZmUtYjk5MS00NGQ5LWFiMTUtMDAxY2Y3NmQ4M2Vh/edit?authkey=CMLHxJIO&authkey=CMLHxJIO

    திவா அண்ணா! மேலே இருப்பது உங்களுடைய பயிற்சிப்பட்டறை, மின்னாக்கம் குறித்த உங்களுடைய ஆவணம். இந்த முறையில் ஒரு நாளைக்கு, ஒருவர் எத்தனை பக்கங்கள் ஸ்கேன் செய்து, புத்தகமாகக் கோர்க்க முடியும் என்கிறீர்கள்?

    கொஞ்சம் உங்களுடைய அனுபவத்தில் கண்டதை உள்ளபடி தெரிவிக்க இயலுமானால் உதவியாக இருக்கும்!

    ReplyDelete
  4. மேற்கண்ட முயற்சிகளில் இப்போதைக்கு நூல்களை மின்னாக்கம் செய்ய சரியானதொரு கருவியை அடையாளம் கண்டிருந்தாலும், அதை உறுதி செய்துக்கொள்ள திவா ஜியின் பதில் உதவியாக இருக்கும் என நினைக்கிறேன்....

    ReplyDelete

ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்

புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம்,  தமிழில் வெளியான நூல்களின் முதல் பதிப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. ஏறத்தாழ ஒரு இலட்சம் நூல்களை தன்ன...